விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் தெற்கு காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஆண்டாள்புரத்தில் உள்ள முருகானந்தம் என்பவரது வீட்டில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வீட்டில் உள்ளவர்களை கட்டி போட்டு தங்க நகைகளை கொள்ளையடித்தது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, புலன் விசாரணையில் இருந்து வந்தது.
மேற்படி வழக்கில் தனிப்படை அமைத்து பல்வேறு கோணங்களில் புலன் விசாரணை செய்து வழக்கின் எதிரி மற்றும் திருடு போன சொத்துகளை விரைவில் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க தென்மண்டல காவல்துறை தலைவர்
Dr.N.கண்ணன் இ.கா.ப., அவர்கள் மற்றும்
காவல்துறை துணைத்தலைவர் திருமதி.ரம்யபாரதி இ.கா.ப., ஆகியோர்களின் அறிவுறுத்தலின் படி, விருதுநகர் மாவட்ட SP திரு.கா.பெரோஸ் கான் அப்துல்லா அவர்கள் உத்தரவின் பேரில், இராஜபாளையம் தனிப்படையினர் மற்றும் குற்றப்பிரிவு காவலர்கள் மேற்படி வழக்கு சம்பந்தமாக துரித நடவடிக்கை மேற்கொண்டு தேடி வந்ததில் 1)சுரேஷ்குமார், 2)அருண்குமார் ஆகியோர்
மூர்த்தி என்பவர் தலைமையில் மேலும் 5 நபர்களுடன் மேற்படி கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. மேலும் 1)லட்சுமி, 2)அனிதாபிரியா, 3)நாகஜோதி, 4)சீனிதாய், 5)மோகன், 6)மகாலட்சுமி ஆகியோர்கள் அவர்களுக்கு உடந்தையாக இருந்து திருட்டு சொத்துகளை மறைப்பதற்கும், விற்று சொத்துக்களை வாங்கவும் உதவி புரிந்ததும் தெரிய வந்தது. மேற்படி எதிரிகளை கைது செய்து விசாரணை செய்ததில் இராஜபாளையம், திருவில்லிபுத்தூர் உட்கோட்டம் மற்றும் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் கடந்த 2021ம் ஆண்டு முதல் நடைபெற்ற கொள்ளை மற்றும் திருட்டு வழக்குகளில் மேற்படி எதிரிகள் சம்பந்தப்பட்டுள்ளார்கள் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேற்படி எதிரிகளிடமிருந்து ரூ.75 லட்சம் மதிப்புள்ள 150 பவுன் தங்க நகைகள் பணம் ரூ.2,50,000/- லேப்டாப் -3, Tablet -3, கைபேசி -3 மொத்த மதிப்பு 84 லட்சம் ஆகியவற்றை கைப்பற்றப்பட்டது. மேலும் கொள்ளையடித்த நகைகளை விற்று இராஜபாளையத்தில் ரூ.4 கோடி மதிப்புள்ள மில் ஒன்றினை வாங்கியுள்ளதும் தெரிய வந்துள்ளது.
மேற்படி சொத்து ஆவணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள மூர்த்தி உள்ளிட்ட ஐந்து எதிரிகளை தனிப்படையினர் தேடி வருகின்றனர். மேற்படி வழக்குகளை கண்டறிய சிறப்பாக புலன் விசாரணை செய்த காவல்துறை அதிகாரிகளை தென்மண்டல காவல்துறை தலைவர் Dr.N. கண்ணன் இ.கா.ப., அவர்கள் நேரில் அழைத்து பாராட்டி சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கினார்.